- ஹரிசரண், பெங்களூரு.இந்தாண்டு (2024) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கு 15 கோடி பேர் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துரையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாதலமாக முன்னேறியுள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023ம் ஆண்டில் 11,74,89 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு தற்போது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில் கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், நடைபெற்று வருகின்றன.
இதுதவிர, கொல்லிமலையை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், உதகை படகு குழாமில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஜவ்வாது மலையில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஏலகிரி மலையில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியை ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகளும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் உள்பட தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பரில் உலக சுற்றுலா தின விழா
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் www.tamilnadutourism.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், வனஉயிரிகள், அரண்மனைகள், நினைவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களின் மெய்நிகர் சுற்றுலாக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள முகவரியை அனைத்து சுற்றுலா அதிகாரிகளும் தங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவர்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் கொண்டு சேர்த்து, உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். குறிப்பாக, செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தின விழாவில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளது.
