“சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் திரும்பிப் பார்த்து, அவருக்கு மனமார நன்றி கூறுகிறேன்.- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.
“இந்தியாவில் இப்போது ஏதாவது ஒரு இடத்தில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஜான் மார்ஷலின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த நாகரிகம் நம்முடையதுதான். சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது” என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.
ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரி சர் ஜான் மார்ஷல். இவர் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 20.9.1924 அன்று ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை வெளியிட்டார். அதில் “திராவிடர்கள் பின்பற்றி வந்ததுதான் சிந்து சமவெளி நாகரிகம்” என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று விவரிக்கிறார்.
சர் ஜான் மார்ஷலில் அறிக்கை வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த அறிக்கை, தமிழர்களுக்கும், குறிப்பாக திராவிட ஆட்சி கட்டுமானத்தை நிர்மாணித்துள்ள திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளதால் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று, அறிக்கையும் கொடுத்துள்ளார். மேலும் இதனை உலகில் அளவில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, அவருக்கு கூறுகிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேபோல் மாநில தொழிற்துறை அமைச்சரான டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சிந்துவெளிப் பண்பாட்டு அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் முதன்முதலில் அகழாய்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இது திராவிட நாகரிகம் என நிறுவினார். அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் தமிழக அரசின் சார்பில் பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும். சர் ஜான் மார்ஷலின் பணியையும் அவர் நினைவையும் போற்றும் வகையில் விரைவில் அவரது உருவச்சிலை ஒன்றும் முக்கிய இடத்தில் அமையும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், “சர் ஜான் மார்ஷலின் இந்தக் கண்டுபிடிப்பு சிந்துவெளிப் பண்பாட்டின் ஆழத்தையும் அகலத்தையும் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது. திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்கள், அந்தப் பண்பாட்டின் பரந்த பகுதி முழுவதும் ஒரே நீள – அகல – பருமன் விகிதத்தில் இருந்த மிகத் துல்லியமான செங்கற்கள், விரிவான வடிகால் வசதிகள், பெரும் குளியல் இடம், தானியக் களஞ்சியம், மென் கற்களால் ஆன முத்திரைகள், செதுக்கப்பட்ட உருவங்கள், குறியீடுகள், மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வரிவடிவங்கள் என்று பல்வேறு அகழாய்வுப் பொருட்களின் மூலமாக வெளிப்பட்ட சிந்துவெளிப் பண்பாடு பண்டைய காலத்தின் புதிய உலகம். சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொடர்ந்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஜான் மார்ஷலின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார்.
மேலும் அவரின் கண்டுபிடிப்பு முன்பு நாம் அறிந்திருந்த வரலாற்றைப் புரட்டிப்போட்டது. இது நடக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்பதை வைத்துதான் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் ஆர். பாலகிருஷ்ணன், ” ஹரப்பாவுக்கும் மொஹஞ்சதாரோவுக்கும் இடையில் சுமார் 500 கி.மீ தூரம் இருந்தது. ஆனால் அவை தனியானவையல்ல. ஒரே கலாசாரத்தின் இருவேறு பகுதிகள். இவற்றுக்கு இடையில் பொதுவான ஒரு வர்த்தக மொழி இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையிலேயே இது ஒரு நாகரிகம் என்ற முடிவுக்கு வந்தார். இதன் மூலம்தான் அவர் வேறுபட்டு நிற்கிறார். அவர் அந்த முடிவுக்கு வந்திருக்காவிட்டால், சிந்துவெளிப் பண்பாடு என்பது கிடையாது. எனவேதான் ஜான் மார்ஷல் நினைவுகூரத் தக்கவராக இருக்கிறார்” என்கிறார்.
இந்தியாவில் இப்போது ஏதாவது ஒரு இடத்தில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஜான் மார்ஷலின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த நாகரிகம் தமிழர்களுடையதுதான் . சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. தமது கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்த யாரையும் தமிழ்நாடு மறக்காது. ஜான் மார்ஷலை நினைவுகூர்வதன் மூலம் இந்திய துணைக் கண்ட வரலாற்றின் மீது தனக்குள்ள உரிமையை தமிழ்நாடு உறுதி செய்கிறது” என ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆக, சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகமா அல்லது இது ஆரிய நாகரிகம் இல்லையா எனத் தெரியாது. ஆனால் தமிழர் நாகரிகத்திற்கும், தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் சங்க இலக்கியத்திற்கும் தொடர்பு உடையவனாக இருக்கிறது என்பதில் எந்தவித அய்யமும் இல்லை என்கிறார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர்கள்.
