நமது நிருபர், பாலாறு மீடியா, மதுரை
மதுரை, அக். 06: தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா 03/10/2024 அன்று கோலாகலமாக தொடங்கியது. மேலும் அக்டோபர் 11 முதல் 13ஆம் தேதி வரை நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் நடைபெறும் இப் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த புகைப்படக் கண்காட்சி அரங்கை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில், 05/10/2024 அன்று நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தார். புத்தகத் திருவிழாவில், புகைப்படங்களை கண்காட்சியாக வைப்பதற்குத் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடியின் கலாசாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை நிலை, தூத்துக்குடியின் கடற் பரப்புக்கள், நதிக் காட்சிகள். ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள், வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழில்துறை, மீன்பிடித்தல், விளையாட்டு போன்றவை தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கலைத்திருவிழா, புத்தகக் கண்காட்சி நடக்கும் வரை இந்த புகைப்படக் கண்காட்சி இருக்கும். இதனை பொதுமக்கள் கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிடலாம்.
இத்துடன், புகைப்படப் போட்டியும் நடக்கிறது. இப் புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும், போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படுகிறது.
இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.
புத்தகத் திருவிழாவில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் ’அறம் பேசு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இன்றைய இளைஞர்களிடம் விஞ்சி நிற்க வேண்டியது சமூகப் பார்வையா..? அல்லது தனிமனித வளர்ச்சியா..? என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறி ஆளுகை செய்தார்.
இன்றைய இளைஞர்களிடம் விஞ்சி நிற்க வேண்டியது சமூகப் பார்வையே என்ற தலைப்பில் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனும், ஆனந்தம் செல்வகுமாரும் உரையாற்றினார்.
தனிமனித வளர்ச்சியே என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனும், இந்திரகுமார் தேரடி ஆகியோரும் உரையாற்றினார்.’ அறம் பேசு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய விருந்தினர்களைக் கனிமொழி எம்.பி கௌரவித்தார்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.