தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம் தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா நிறுவனங்களுக்கும், சுற்றுலா ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்து வருகிறது.
யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், வனஉயிரிகள், அரண்மனைகள், நினைவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்களின் விவரங்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் www.tamilnadutourism.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களின் மெய்நிகர் சுற்றுலாக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள முகவரியை அனைத்து சுற்றுலா அதிகாரிகளும் தங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவர்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் கொண்டு சேர்த்து, உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.
குறிப்பாக, இம்மாதம் (செப்டம்பர் மாதம்) 27ம் தேதி உலக சுற்றுலா தின விழாவை அரசு கொண்டாட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த விழாவில், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாவுக்காக பாடுபடும் ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா கைடுகள், சுற்றுலா அதிகாரிகள், பயணிகள் ஆகியோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கொரொனா காலம முடிவடைந்து சுற்றுலாத்துறை படிப்படியாக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற முன்னெடுப்புகள் துறை ரீதியாக நல்ல வளர்ச்சியை உருவாக்கும் என்பது அய்யமில்லை.
