நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.
சுதந்திரப் போரில் ஈடுபாடு
வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.
இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 இல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.
அரசியல் நுழைவு
1922 இல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.
சுதந்திர இந்திய இராணுவம்
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு
சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்…இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது…முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், செருமனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது…இந்திய விடுதலைக்கான போர், ஐரோப்பாவில் இட்லராலும், ஆசியாவில் சப்பானும் மறைமுகவாகவேனும் பிரித்தானியாவிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரித்தானியரின், ‘வெளியேறுவது’ என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் ‘இந்தியாவை விட்டு வெளியேறுவது’ என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
அரசியல் தத்துவம்
சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார்.
சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.
போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்
திரைப்படங்கள்
2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள “சுப்பர்”.
* 2008: தெலுங்கு மொழித் திரைப்படம் “சுபாஷ் சந்திர போஸ்”
* 2005: இந்தி மொழித்திரைப்படம் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்”
* 2002: இந்தி மொழித்திரைப்படமான “பகத் சிங்கின் கதை” இல் போஸ் பற்றிய காட்சிகள்
* 1966: வங்காளி மொழித்திரைப்படம் “சுபாஷ் சந்திரா”
* 1950: இந்தி மொழித்திரைப்படமான “சமாடி” இல் போஸின் சிறு பாத்திரம்
நூல்கள்
* 1986: “பெரும் இந்தியப் புதினம்” (த கிரேட் இன்டியன் நோவல்) என்ற புதினத்தில் போஸ் பற்றிய கதாபாத்திரம்
* 2012: கே.எஸ்.சிறிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திர போஸ்
